×

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!

சென்னை: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது தருமபுர ஆதீனம். இந்த ஆதீனத்தின் 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் இருந்து வருகிறார். ஆதீனத்தின் உதவியாளர் விருதகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்நிலைய கண்காணிப்பாளருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதன்படி, தருமபுரம் தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ, ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக வினோத், செந்தில், விக்னேஷ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அகோரம் ஏற்கனவே ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் மீண்டும் ஜாமின் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அகோரம் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 45 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

அதற்கு காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சில குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதால் அகோரத்துக்கு ஜாமின் தரக்கூடாது, இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் கடும் எதிர்ப்பை அடுத்து பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கனவே ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Darumapuram ,Adina ,J. K. Jamin ,Executive Agorat ,Chennai ,Mayiladuthura District ,Darumpura Adenam ,Srilasri Masilamani ,Desica Gnanasambanda Paramachariyar ,Mashilamani ,Dinakaran ,
× RELATED தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்...